மோட்டார் போக்குவரத்து திணைக்கள கணக்காய்வாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண் அழகுக்கலை நிபுணர் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணக்காய்வாளர் நாயகத்தின் முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளர் ஒருவரின் இல்லத்திற்கு பலர் சென்று அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வாரியப்பொல பிரதேசத்தில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், கொலன்னாவையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அழகுக்கலை நிபுணரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 33 மற்றும் 38 வயதுடைய ஆண் சந்தேக நபர்கள் வாரியப்பொல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (18) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.