இலங்கைக்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாது – லயன் சிறீதர்

இலங்கைக்கு ஆபத்தான தருணங்களில் உதவுவதற்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாது என நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் சட்டத்தரணி லயன் சிறீதர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானதும் ஆழமானதுமாகும்.

எமது கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழ் மக்களுடன் நெருங்கி பழகும் ஒருவராக காணப்படுவதுடன் எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் உறவுகளை சந்தித்து கலந்துரையாடுவது அவரது பழக்கம்.

நான் ஆறு வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் பாரிய மாற்றத்தை காண்பதோடு சென்னையை ஒப்பிடும்போது யாழ்ப்பாணம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

கொவிட் – 19 தாக்கத்திற்கு பின்னர் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலை நான் உள்நுழைந்து பார்க்கவில்லை.

இலங்கையில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டு அரசின் உதவிகள் மத்திய அரசின் ஊடாக இலங்கைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி ஒரு சில வருடங்களில் சிறந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள்ள நிலையில் அயல் நாடான இந்தியா தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கும்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை தாண்டும்போது கைது செய்யப்படுவதும் அதேபோல் இலங்கை மீனவர்கள் இந்தியா கடற்பரப்பைத் தாண்டும்போது கைது செய்வது வழமையாக காணப்படுகிறது.

இரு நாடுகளும் நல்ல நண்பர்கள் ஆகையால் எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை விடுத்து நல்லெண்ண அடிப்படையில் அணுக வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்.

தமிழக அகதி முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த ஈழத் தமிழ் மக்கள் துன்பப்படுவதாக தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்திய நிலையில் முதல்வர் 350 கோடி ரூபாயை அவர்களின் நலத்திட்டத்திற்காக ஒதுக்கினார்.

எமது கட்சியினுடைய தலைவர் கமல்ஹாசன் ஈழத் தமிழர்களுக்காக அவர்களுடைய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து குரல் கொடுத்து வருகிறார் குறிப்பாக அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் நிகழும் போது கறுப்புச் சட்டை அணிந்து போராட்ட களத்திலே எதிர்ப்புகளில் ஈடுபட்டவர்.

ஆகவே தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழ் மக்கள் எங்கெல்லாம் துன்பப்படுகிறார்களோ அவர்களுக்காகாக மக்கள் நீதி மையம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *