
உக்ரைனில் தொடரும் போர் மற்றும் நெருக்கடிகள் உலகளவில் தொழிலாளர் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக”கூர்மையான” மந்தநிலை நிலவி வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, அண்மைய மாதங்களில்,உலகளாவிய தொழிலாளர் சந்தைகளுக்கான கண்ணோட்டம் மோசமடைந்துள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த நடப்பு ஆண்டின் 2022 இன் கடைசி மூன்று மாதங்களில் உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சி கணிசமாக மோசமடையும், அத்துடன் வேலையின்மை அதிகரிக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கில்பர்ட் ஹூங்போ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தீவிர எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடிகள், வீக்கமடைந்த பணவீக்கம், இறுக்கமான பணவியல் கொள்கை மற்றும் உலகளாவிய மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலைகளின் தரம் இரண்டும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கக்கூடிய வேலைகளின் எண்ணிக்கை சுருங்கி வருவதுடன், பணவீக்கம் அதிகரித்து வருவதால், பல நாடுகளில் உண்மையான ஊதியங்கள் வீழ்ச்சியடைகின்றன.
இதேவேளை போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 24 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.