
இரண்டாவது எலிசபெத் மகாராணி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர மக்களுக்காக தனது கையெழுத்தில் அனுப்பி வைத்துள்ள செய்தி அடங்கிய கடிதம் அந்நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தி அடங்கிய கடிதத்தை இன்னும் 63 வருடங்களுக்கு வாசிக்க முடியாது என்பதே அதில் உள்ள சிறப்பம்சம். சிட்னி நகரில் உள்ள தொல்லியல் பெறுமதிமிக்க விக்டோரியா ராணி என்ற கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தை எதிர்வரும் 2085 ஆம் ஆண்டு ஆண்டு வரை திறக்கக்கூடாது என்ற கடுமையான ஆலோசனையுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான புனரமைப்பு நடவடிக்கைகளில் பின்னர் அன்றைய தினத்தில் இருந்து 99 ஆண்டுகளுக்கு வாசித்து அறிய முடியாத அந்த கடிதத்தை இரண்டாவது எலிசபெத் மகாராணி எழுதியுள்ளார்.
தனது கையெழுத்தில் மகாராணி எழுதிய அந்த கடிதத்தில் என்ன உள்ளடங்களியுள்ளது என்பது அவரது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவுக்குக்கூட தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அந்த கடிதத்தில் அப்படி என்ன அடங்கி இருக்கும் என்பதை அறிய சிட்னி மக்கள் ஆவலாக இருந்த போதிலும் அவர்கள் பல ஆண்டுகள் அதற்காக காத்திருக்க வேண்டும்.
சிட்னியில் உள்ள விக்டோரியா ராணி கட்டடத்தில் மேலே அமைந்துள்ள சதுர வடிவ பெட்டிக்குள் இந்த கடிதம் வைக்கப்பட்டுள்ளது. 2085 ஆம் ஆண்டில் பொருத்தமான தினத்தில் இந்த கடித உறையை பிரித்து சிட்னி நகர வாசிகளுக்கு தனது செய்தியை வழங்குமாறு எலிசபெத் மகாராணி தனது கையெழுத்தில் அதில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கும்?
இரண்டாவது எலிபெத் மகாராணியார் சிட்னி மக்களுக்கு அப்படி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருப்பார் என்பது பலருக்கும் தெரியாது. அவரும் மரணமடைந்து விட்டார். 2085 ஆம் ஆண்டு அந்த கடித உறையை திறந்து வாசிக்கும் போதே அதில் என்ன இருக்கின்றது என்பதை முழு உலகமும் அறிய முடியும்.