ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்றது – சாந்த பண்டார

(இராஜதுரை ஹஷான்)

300 மில்லியன் ரூபா முற்பணமாக கிடைத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடலாம்.

நிதி ஒதுக்கீடு முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை, ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்றது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று (16) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச அச்சகத் திணைக்களம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் விடயதானத்திற்குள் உள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 150 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது, ஆனால் திறைசேரி 40 மில்லியன் ரூபாவை இதுவரை வழங்கியுள்ளது.

நிதி,மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் திறைசேரிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளார்.

போதிய பாதுகாப்பு வழங்க தயார் என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் நிதி விடுப்பு தொடர்பில் திறைசேரி சாதகமான பதிலை அறிவிக்கவில்லை.

நிதி இல்லாமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது அரச அச்சகத் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.300 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்கினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியும்.

நிதி ஒதுக்கிடல் முன்னிலை பட்டியலில் தேர்தல் நடவடிக்கைகள் உள்வாங்கப்படவில்லை,ஆகவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவது சாத்தியமற்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *