(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்தமைக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக , புதிய உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாடுகள் இவ்வாரம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 1137 பேரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமையின் காரணமாக அவர்களின் உள்ளூராட்சிமன்ற உறுப்புரிமையும் இரத்தாகும் என்ற அடிப்படையில் , அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்கள் , நகரசபைத் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இவர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வினை நடத்தி தகுதியான நபர்களை தெரிவு செய்து , இடைவெளி ஏற்பட்டுள்ள பதவிகளுக்கு நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.