
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் திகதி ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக சென்ற தந்தை, மகன் உட்பட நான்கு மீனவர்கள் இன்று வரை கரைக்கு திரும்பவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
கடலுக்குச் சென்ற மீனவர்களின் உறவினர்கள் இன்று (15) வாழைச்சேனை காவல்நிலையத்தில் இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் காணாமற் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமற் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
19 தினங்களாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று வரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன், மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 19 நாட்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை என்பதுடன், படகுடன் எவ்விதத் தொடர்புகளுமின்றி தாங்கள் உள்ளதாக குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமற் போயுள்ளனர்.