”தொடர்ந்து கிராமிய பின்னணியிலான கதைகளில் நடிப்பதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பேன்” என ‘காரி’ படத்தின் அறிமுக விழாவில் ‘கிராமத்து நாயகன்’ சசிகுமார் தெரிவித்திருக்கிறார்.

நடிகர்களான கார்த்திக், ராமராஜன் ஆகியோருக்கு பிறகு மண் மனம் கமழும் கிராமிய பின்னணியிலான கதைகளை தெரிவுசெய்து, நடித்து வருவதில் முன்னணியில் இருக்கும் நட்சத்திர நடிகர் சசிகுமார், அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படமான ‘காரி’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ஜே.டி. சக்கரவர்த்தி, சம்யுக்தா ஷான், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டையும், கிராமத்து எல்லை தெய்வத்தை மையப்படுத்தியும் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் லட்சுமண் குமார் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 25ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் பங்குபற்றிய நடிகர் சசிகுமார் பேசுகையில்,

”தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து வருவது ஏன்? என பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்குள்ள மக்களோடு பழகியவன். இதனால் அவர்களுக்கு பிடித்த கதைகளில் நடிப்பதை எனது பாதையாக நிர்ணயித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், இதுபோன்ற கிராமத்து கதைகளில் நடிக்கும்போது தான், நம் மண்ணின் கலாசாரமும் பாரம்பரியமும் அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்லப்படும்.

இதனை நான் மட்டும் முன்மொழியாமல், நான் நடிக்கும் படத்தை பார்த்து பாராட்டும் புலம்பெயர்ந்த மக்களும் வழிமொழிகிறார்கள். இதனால் இதுபோன்ற கிராமத்து கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் பின்னணியிலும், ‘காரி’ என்ற காவல் காக்கும் எல்லை தெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும். இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் கதைகளை விவரித்த விதம், அதை படமாக்கிய விதம், அதை திரையில் பின்னணி இசையுடன் செதுக்கிய விதம் என அனைத்தும் பிரமிப்பாக இருக்கிறது. இந்த படைப்பு அனைத்து ரசிகர்களையும் கவரும்” என்றார்.

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘நான் மிருகமாய் மாற’ படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி அவர் நடிப்பில் ‘காரி’ படம் வெளியாகி, அதைவிட கூடுதலான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *