(எம்.மனோசித்ரா)
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை (16) காலை 8 மணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தொழில் வல்லுனர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சாதமான கலந்துரையாடல்கள் மூலம் வரி வசூலிப்பு சட்ட மூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளில் எமது விசேட கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை.
எனவே தொழிற்சங்க நடவக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள போதிலும் , தொடர்ந்தும் அரசாங்கத்தினால் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
எனவே இது தற்காலிக இடைநிறுத்தமே தவிர, நிரந்தமானதல்ல. கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப் பெற்ற பதில்களை விட, இதில் சாதகமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்றார்.