(எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சு பதவியை எடுக்குமாறே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு முறை அழைத்தார். ஆனால் பாராளுமன்ற பதவியில் இருந்து விலகவேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பியதாக பொய் கூறுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென எனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

மக்களின் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுகிறார். உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது.

ஜனநாயகம், லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் ஜனாதிபதியின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய பாராளுமன்ற நடத்தை நன்றாக புலப்படுத்துகிறது.

அவர் உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை,மக்கள் ஆணைதேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடத்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுரகுமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை பொறுப்பெடுக்குமாறு 2 முறை  ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார்.

எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள். இதைத்தவிர ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமோ எமக்குள் இடம் பெறவில்லை.

இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுஞ்செய்தி ஒன்றை ஜனாதிபதி ரணில் எனக்கு அனுப்பவில்லை.அவர் குறுஞ்செய்தி எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *