
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை அமைந்துள்ளது.
வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறிப்பாக தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதும் விற்பதும் வழக்கமாகும்.
இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று ஆட்டுச்சந்தையில் அதிகாலை முதலே அதிகமானோர் கூடியுள்ளனர்.
அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒவ்வொரு ஆடும் 12 ஆயிரம் ரூபா முதல் 15 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரங்களை விட விலை சற்று குறைவாக இருந்ததாலும் நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 5 கோடி ரூபாவுக்கு ஆடுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு 7 கோடி ரூபா வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்