(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஆதரவு வழங்கினார்கள்.

ஆகவே வாக்குரிமை தொடர்பில் கருத்துரைக்க இவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வஜன வாக்குரிமை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனநாயகம், வாக்குரிமை தொடர்பில் நீண்ட உரையாற்றினார்.

தேர்தலில் தோல்வியடைவோம் என்று அறிந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தினார், ஆகவே தேர்தலை கண்டு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து தற்போது கருத்துரைக்கும் எதிர்க்கட்சிகள் மாகாண சபை தேர்தலை மறந்து விட்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் முழுமையான ஆதரவு வழங்கினார்கள்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பாரிய சிக்கல் நிலை தோற்றம் பெறும்  என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் பொதுஜன பெரமுன வெற்றிப் பெறும்,ஆகவே பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் திருத்திமைத்தது.

மாகாண சபைத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத தன்மை காணப்படுகிறது. ஆகவே நாட்டு மக்களின் வாக்குரிமை தொடர்பில் கருத்துரைக்க எதிர்க்கட்சி தலைவருக்கும்,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்றார். —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *