
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்குரிய சட்டமூல வரைவை தயாரிக்கும் பணிகளை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.
எனவே, புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது, பழைய பயங்கரவாத தடைச் சட்டம் ரத்தாகும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.