பிறந்து ஏழு நாட்களேயான தனது கைக்குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்த இளம் தாயொருவர் அனுராதபுரம் அரச வைத்தியசாலையொன்றில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிசுவை விற்பனைசெய்வதற்கு உதவியதாக கூறப்படும் தாதி ஒருவரின் கணவரும் அவருடன் கைதுசெய்யப்பட்டடுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தையையும், அரசாங்க வைத்தியசாலையின் தாதியொருவரை, வைத்தியசாலை உதவியாளர் ஒருவரையும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு குழந்தையை விற்க முயன்றுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண், தமது குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியொன்றுக்கு விற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபரான பெண்ணுக்கு ஒன்றரை வயதுடைய மகன் ஒருவரும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.