மஹிந்தவின் அரசியல் பயணத்தை நாமல், பஷில் முழுமையாக சீரழித்து விட்டனர் – விமல் ஆதங்கம்

(இராஜதுரை ஹஷான்)

 

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ முழுமையாக சீரழித்து விட்டார்கள்.

ராஜபக்ஷர்களுடன் இனி ஒன்றிணைய போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சகோதரர்களுக்கு முன்னுரிமை வழங்கி 69 இலட்ச மக்களாணையை மலினப்படுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12)  மாலை இடம்பெற்ற சுதந்திர மக்கள் கூட்டணி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் பலமுறை எடுத்துரைத்தோம்.

வெளிநாட்டு கையிருப்பு ஏதும் கிடையாது என முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை தவறாக வழிநடத்தினார்.

பொருளாதார நெருக்கடி இறுதியில் பாரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் வரலாற்றில் எவருக்கும் நேராத நிலைமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டது.மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நாமல் ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முழுமையாக இல்லாதொழித்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ராஜபக்ஷர்கள் குடும்பம் முழுமையாக ஆக்கிரமித்ததால் இரண்டரை வருட காலத்திற்குள் நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.

சுதந்திர மக்கள் கூட்டணி தங்காலைக்கு அல்லது நெலும் மாவத்தைக்கு செல்லும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை. அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷர்களுக்கு எதிராக தனித்து அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவதென்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக தஞ்சமடைந்துள்ளதை 69 இலட்ச மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *