
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை (18) மாலை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட 19 பேரில் குறித்த மூவரும் அடங்குவர்.
சந்தேகநபர்களில் 15பேர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், வண. கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்படவில்லை, மாறாக 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னதாக கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி அவ்வாறு கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று அவர் ட்வீட் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.