விவசாய நிலங்களுக்குள் உட்புகும் குரங்குகள், மயில்கள், அணில்கள், பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குரங்குகள், மயில்கள், அணில்கள், பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகளை கொல்வதற்கு வழங்கியுள்ள அனுமதியை ஏற்றுகொள்ள முடியாது. மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது உணவை தேடிச் செல்லும் விலங்குகளை கொல்வது என்பது பெரிய அநீதியாகும்.
இந்த விலங்குகள் வசிக்கும் காடுகளை அழித்து கட்டடங்களை கட்டுதல் மற்றும் இயற்கைக்கு ஒவ்வாத விடயங்களை மேற்கொள்வதால் தான் விலங்குகள் உணவுப் பற்றாக்குறையால் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள மனிதன் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.
ஆகவே காடுகளை அழித்து, கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அதிகாரியின் மீதும் திணைக்களத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர விலங்குகள் மீது அல்ல.
எனவே, இந்த முடிவை உடனடியாக விவசாய அமைச்சு மீளப்பெற வேண்டும். இந்த முடிவுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.