கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகமொன்றில் இருந்து நேற்று (24) இணையதளத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியில் எலியின் தலையுடனான பகுதி காணப்பட்டுள்ளது.
குறித்த எலியானது உணவுக்காக சேர்க்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் நேற்று கொழும்பு – கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு – கோட்டை காவல் நிலையத்தினால் கொழும்பு மாநகரச் சபை பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனியிடம் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று குறித்த உணவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன், கொழும்பு மாநகரச் சபை பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனியிடம் எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களிடம் முன்னெடுத்த விசாரனைகளின் போது அந்த உணவுப்பொதியில் காணப்பட்டது எலி அல்ல முயல் என தெரிவியவந்துள்ளது.
தமக்கு கிடைக்கப்பெற்ற உணவு பதிவானது கோழி இறைச்சியுடனான உணவு என்பதுடன், தனது கடையில் கோழி இறைச்சி மற்றும் முயல் இறைச்சி போன்ற இரண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த உணவு பதிவுக்காக கோழி இறைச்சிக்கு பதிலாக முயல் இறைச்சியை வைத்து அனுப்பிவிட்டதாகவும் உணவக உரிமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் முயல் இறைச்சி விற்பனை செய்வது பிழை இல்லை என்றும், அதனை விற்பனை செய்வதற்காக கொழும்பு மாநகரச் சபையின் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பூரண அனுமதியை பெற வேண்டும் எனவும் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த உணவகத்தில் முயல் இறைச்சி விற்பனை செய்ய எந்தவொரு அனுமதி பத்திரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பம் தொடர்பில் முன்னெடுப்படும் பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 நாட்களில் கிடைக்கப்பெறுவதுடன், உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம்(25) உணவுச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மாநகர சபை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றச்சாட்டுக்களுக்காக 15,000 ரூபா அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின் அந்த உணவில் உள்ள உயிரினம் அடையாளம் காணப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்தார்.